கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரின் மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
2017-ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தனிப்படை மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதுவரை 240-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. அந்த வகையில் நேற்று முதன்முறையாக மணல் ஒப்பந்ததாரர்களான ஆறுமுகசாமி மற்றும் அவரின் மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.. கடந்த 2017-ம் ஆண்டு சென்னையில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் குமாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது..
நேற்றைய தினம் ஆறுமுக சாமி மற்றும் செந்தில்குமாரிடம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், 2-வது நாளாக இன்றும் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.. கோவை காவலர் பயிற்சியில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.. சசிகலா, தினகரன் குடும்பத்தினருடன் செந்தில்குமாரின் தந்தை ஆறுமுகசாமி நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் ஆறுமுகசாமியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..