மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் இன்று மகிழ்ச்சியான செய்தி வரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய சுரங்கத்துறை அமைச்சரை சந்திக்கும் வகையில் அரிட்டாபட்டி விவசாயிகளை பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; டங்ஸ்டன் விவகாரத்தில் இன்று மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகும். தொடக்கத்தில் இருந்தே இதற்கு தீர்வு வழங்கவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கோமியம் குறித்து வகுப்பறையில் ஐஐடி இயக்குநர் பேசாததால், அதுகுறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டாம். அதை முடித்துக் கொள்வோம்.
இது தொடர்பாக முன்னாள் ஆளுநர் தமிழிசையின் விளக்கத்துக்கும் நான் கருத்து கூற விரும்பவில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து. ஆர்கேநகர் காவல்நிலையம் முன் கூலித் தொழிலாளி தீக்குளித்த சம்பவத்தை பார்க்கும்போது சாமானிய மனிதர்களுக்கு அச்சம் ஏற்படும். அவரது புகாரை ஏற்க காவல்துறை மறுத்தனரா என்பன உள்ளிட்டவை தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.