சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரின் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையிலிருந்து எடுக்கப்பட்ட சடலத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது பிரபலமான ரோகினி தியேட்டர் . இந்த தியேட்டரில் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்படங்கள் எப்போதும் வெளியிடப்படும். இந்த தியேட்டரின் வளாகத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதில் வாரம் ஒருமுறை லாரிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் தண்ணீர் நிரப்புவதற்காக லாரி வந்திருக்கிறது. இதற்காக குடிநீர் தொட்டியின் மூடியை திறந்த போது அதிலிருந்து துர்நாற்றம் வீசவே கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்திருக்கிறது தியேட்டர் நிர்வாகம். இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தண்ணீர் தொட்டியில் ஆய்வு செய்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டறிந்து அதனை மீட்டனர் .
தண்ணீர் தொட்டிக்குள் இறந்து கிடந்த நபர் ரோகினி தியேட்டரில் எலக்ட்ரீசியன் ஆக பணி புரிந்த வெங்கடேச பெருமாள் என்று அடையாளம் காணப்பட்டது. மேலும் இவர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மது போதையில் தியேட்டருக்கு வந்ததாகவும் நிர்வாகம் காவல்துறையிடம் தெரிவித்துள்ளது. மது போதையில் வந்த வெங்கடேச பெருமாள் தவறுதலாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாரும் கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார்களா ? அவர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததையும் கவனிக்காமல் தண்ணீர் தொட்டியை மூடியது யார்? என்ற பலகோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.