அரியலூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு 31 வயதான இலக்கியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேசுக்கு பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இது குறித்து ஒரு கட்டத்தில், இலக்கியாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த இலக்கியா, சிறுகனூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே, அங்கு இருந்த இலக்கியா, சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் கடைசி வரை வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், தங்களின் மகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, இலக்கியாவின் உடல், தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் மிதந்துள்ளது.
மேலும், அவரது உடம்பு முழுவதும் காயங்கள் இருந்துள்ளது. இதைப்பார்த்து அலறிய உறவினர்கள், சம்பவம் தொடர்பாக சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இலக்கியாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் இலக்கியாவின் கணவர் வெங்கடேஷிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் கூறும் போது, “எனக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால், இலக்கியா என்னுடன் சண்டை போட்டு விட்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். பொங்கல் பண்டிகைக்கு, மாமியார் வீட்டுக்கு சென்ற நான், இலக்கியாவை சமாதானம் செய்தேன். ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை. அதனால் தான், இலக்கியாவை கொலை செய்ய முடிவு செய்தேன்.
அதன் படி, நீ தனியாக வா, பேசணும்” எனறு இலக்கியாவை அழைத்தேன். பின்னர் இருவரும் சேர்ந்து சிறுகனூர் அருகே உள்ள வாய்க்காலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பிறகு, என்னிடம் பேசிவிட்டு, அவளது அம்மா வீட்டிற்கு கிளம்பி சென்றாள். அவள் நடந்து செல்லும் போது அவள் பின்னாடியே சென்று, துணியால் இலக்கியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அங்கிருந்த கால்வாயிலும் சடலத்தை வீசிவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் வெங்கடேஷை கைது செய்து திருச்சி ஜெயிலில் அடைத்துள்ளனர்.