பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்..
தெலங்கானாவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் மாநில சட்டசபையில் நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பதிலளித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ உண்மையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடியை விட சிறப்பாக செயல்பட்டார். மன்மோகன் சிங், தன் சாதனைகளை பற்றி பெருமையடித்து கொள்ளவில்லை, அமைதியாக தனது வேலையை செய்தார்.. ஆனாலும், மோடி சிறந்த ஆட்சியை வழங்குவார் என எதிர்பார்த்து, மக்கள் வாக்களித்தனர். ஆனால் நாடு இதுவரை கண்டிராத மிகவும் திறமையற்ற பிரதமர் மோடி என்பதை நிரூபித்தார்..” என்று தெரிவித்தார்..

பத்திரிக்கையாளர் பூஜா மெஹ்ரா எழுதிய “தி லாஸ்ட் டிகேட்” என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டிய அவர், மோடி ஆட்சியின் போது, அனைத்து துறைகளிலும் நாடு மோசமாக இருந்தது.. ஆனால் இன்னும், அரசாங்கம் ஒருபோதும் அடையாத வெற்றிகளைப் பற்றி பெருமை பேசுகிறது.
மன்மோகன் சிங் ஆட்சி தொடர்ந்திருந்தால், தெலங்கானாவின் ஜிஎஸ்டிபி (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி) தற்போதைய ₹13 லட்சம் கோடியிலிருந்து ₹16 லட்சம் கோடியாக இருந்திருக்கும். பாஜகவின் திறமையற்ற ஆட்சியால் மாநிலத்திற்கு ₹3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
192 நாடுகளில், தனிநபர் வருமானத்தில் இந்தியா 139 வது இடத்தில் இருப்பதாகவும், பங்களாதேஷ், பூடான் மற்றும் இலங்கை கூட மிகவும் முன்னேறி உள்ளது.. இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்திருக்க வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பாஜக மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை பேச விடாமல் செய்கிறது..
அதானி விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை அறிய ஒட்டுமொத்த தேசமும் ஆர்வமாக இருந்தது, ஆனால் மோடி தனது உரையில் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. பொதுத்துறை நிறுவனங்களை கண்மூடித்தனமாக தனியார்மயமாக்குவதில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது..
நஷ்டத்தை சமூகமயமாக்குவதிலும், லாபத்தை தனியார்மயமாக்குவதிலும்” மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதிகாரம் என்பது தற்காலிகமானது, தங்கள் வாக்குகள் மூலம் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்..” என்று தெரிவித்தார்..
சட்டசபையில் கேசிஆர் தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக தெலுங்கானா பிரிவு தலைவர் பண்டி சஞ்சய் கடும் கண்டனம் தெரிவித்தார்.. பிரதமரை அவதூறாக பேசுவதற்காக மாநில சட்டசபையை கேசிஆர் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும் “ சபையில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு எதிராக எந்த உறுப்பினரும் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்பது மரபு. ஆனால், கே.சி.ஆர் அந்த மரபிலிருந்து விலகி, அவமரியாதையான முறையில் மோடி மீது அவதூறுகளை வீசினார்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.