கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்தனர். இதனால் அவர்கள் கோவிலுக்கு அருகே உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின் படிப்படியாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நேற்று தமிழ்நாடு மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர், திருச்செந்தூர் கடலில் ஏற்பட்ட மணல் அரிப்பை ஆய்வு செய்தனர்.
மண்டபத்தில் 6 மணிநேரத்திற்கு மேலாக பக்தர்கள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பசியால் வாடுவதாகவும், சில குழந்தைகள் அழுவதாகவும், தங்களை திறந்துவிட்டால் வெளியிலாவது சென்றுவிடுவோம். உணவுக்கு கூட ஏற்பாடுகள் செய்யாமல் தவிக்க வைக்கிறார்கள் என ஆதங்க குரல் எழுப்பினர். மக்கள் தங்களின் குமுறலை வெளிப்படுத்தியபோது, அமைச்சரிடம் கனிமொழி விபரம் குறித்து கேட்டறிய முற்பட்டார். அப்போது பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “திருப்பதிக்கு போனால் 24 மணி நேரம் நிற்பான், இங்க கத்துறான். சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால், நிற்கத்தான் வேண்டும் என பேசியபடி சென்றது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி உள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை, உணவு, தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தபோது, “திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்” என்று ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
திருப்பதி கோவிலில் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய வசதிகள் செய்திருக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் உண்டியல் பணத்தை முறைகேடாகச் செலவழிப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் நேர்மையான உழைப்பில் கிடைக்கும் பணத்தில் சிறு பகுதியை, கோவில்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் பிரசாதத்தில் கமிஷன் அடிப்பதில்லை.
கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதை விட அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம், காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்துகிறேன். காலம் மாறும். தனது ஒவ்வொரு தவற்றுக்கும், அமைச்சர் சேகர்பாபு, ஆண்டவனுக்கும், பொதுமக்களுக்கும் பதில் சொல்லத் தயாராக இருந்து கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.