திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள குன்னத்தூர் கருங்கல்மேடு பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தனது மனைவி ரத்தினாள் என்கின்ற ரஞ்சிதம் (26) மற்றும் ஒன்றரை வயது மகன் இனியனுடன் வசித்து வருகிறார். இனியனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் ரத்தினாள் மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்ற ரஞ்சிதம் வீடு திரும்பவில்லை. ஈஸ்வரமூர்த்தி தனது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன் ஈஸ்வரமூர்த்தியும், மற்றும் உறவினர்களும் ரஞ்சிதத்தை தேடி வந்தனர்.
இதனிடையில் கோபியை அடுத்த கீழ்பவானி வாய்க்காலில் கரை ஓரத்தில் ரஞ்சிதத்தின் செருப்பு மற்றும் துணிகள் இருந்ததை கண்டுள்ளனர். இதனை தொடர்ந்து ரஞ்சிதத்தையும், இனியனையும் கீழ்பவானி வாய்க்காலில் தேடி வந்தனர். அப்போது இனியனின் உடல் ஈரோட்டை அடுத்த வெள்ளோடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் மிதந்தன.
விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து ரஞ்சிதத்தின் பிணம் கோபி பகுதி சின்னகுளம் கீழ்ப்பவானி வாய்க்காலில் மிதந்தது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ரஞ்சிதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மகன் இனியனுக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி கேட்டதால் மன வருத்தத்தில் இருந்த ரஞ்சிதம், குழந்தையுடன் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. எனினும் போலீசார் பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.