சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் இன்று நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 13-ம் தேதி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி நுழைபவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துகிறது.
சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் இன்று நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் சில தமிழக விவசாய சங்கங்கள் ஆதரவு கொடுத்துள்ளது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் இதனால் மூடப்படாது. விருப்பப்படும் வணிகர்கள் மட்டுமே பந்தில் பங்கேற்க இருப்பதால் வணிகத்திலும் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.