திருச்சி அருகே உள்ள வளநாடு பகுதியில் விளையாடு கொண்டிருந்த சிறுவனின் மீது ஒலிபெருக்கி பெட்டி விழுந்ததில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவருக்கு எட்டு வயதில் நித்திஷ் பாண்டியன் என்ற மகன் இருந்தான். அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் வெள்ளிக்கிழமை காலை வீட்டின் அருகே இருந்த முருகன் கோவிலில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கோவிலில் உள்ள ஒலிபெருக்கி பெட்டி எதிர்பாராத விதமாக சிறுவனின் தலையில் விழுந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக வளநாடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஒலிபெருக்கி விழுந்ததால் எட்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.