திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து 2 வருடங்கள் நிறைவு செய்து 3வது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற போது போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜகண்ணப்பன் சிக்கியதால் அவரிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டு, சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது.
அதன் பிறகு அமைச்சரவையில் எந்த விதமான மாற்றமும் இன்றி ஆட்சி நடைபெற்று வருகிறது இத்தகைய நிலையில், தமிழக அமைச்சர்கள் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருகின்ற நிலையில், அந்த விவகாரம் முதல்வருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தகைய நிலையில், சென்ற வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கின்ற நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் 11ம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது.
அந்த தகவலின் அடிப்படையில், நிதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய பழனிவேல் தியாகராஜனை வேறு துறைக்கு மாற்றி விட்டு புதிதாக தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுவை நிதித்துறை அமைச்சராக நியமனம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அத்துடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய துரைமுருகனுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் கயல்விழி உள்ளிடோர் முற்றிலுமாக நீக்கப்படலாம் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.
ரகுபதி அல்லது மனோ தங்கராஜ் உள்ளிட்ட இருவரில் ஒருவருக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தங்கம் தென்னரசு வைத்திருக்கும் தொழில் துறை டிஆர்பி ராஜாவுக்கும், மனோதங்கராஜ் அவர்களுக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக தமிழரசி மிக விரைவில் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.