தலைநகர் டெல்லியின் இந்திரபுரியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் இந்திரபுரியை சேர்ந்த நிதிஷ் (22) என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிதிஷை கத்தியால் குத்தி கொலை செய்தது யார், என்பது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். அப்போது இந்திரபுரியின் ரஞ்சித் நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினருக்கு அர்ஜூன் (22) என்ற இளைஞர் மீது சந்தேகம் எழுந்ததால் அவரை பிடித்து விசாரித்தனர். அர்ஜூனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிதிஷை கொலை செய்ததை அர்ஜுன் ஒப்புக்கொண்டான்.
மேலும், விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்தும் அர்ஜூன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். நிதிஷ் தனது செல்போனை உடைத்துவிட்டு, அதை சரிசெய்ய பணம் தரவில்லை என்றும், சென்போனை பழுதுபார்க்க பணம் தராததால் தனக்கும் நிதிஷூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது நிதிஷை கத்தியால் குத்துவிட்டு தப்பிச்சென்றதாகவும் அர்ஜூன் தெரிவித்துள்ளான். இதைதொடர்ந்து, அர்ஜூனை கைது செய்த காவல்துறையினர், ரத்தக்கரை படிந்த கத்தி மற்றும் சட்டை, உடைந்த நிலையில் இருந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.