கேரள மாநிலம் கண்ணூர் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் வெளி மாநிலத்திலிருந்து வந்து புதிதாக சேர்ந்தார். இந்நிலையில் அந்த மாணவியுடன் அதே வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் நெருங்கி பழகி இருக்கிறான். அந்த மாணவன், மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். மேலும் அந்த மாணவியின் பெற்றோரிடம் நல்ல பையன் என்று சொல்லும் அளவிற்கு பழகியுள்ளான்.
வேறு மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு வந்திருந்ததாலும், புதிய பள்ளியில் சேர்ந்ததாலும் அந்த மாணவி மனதளவில் சற்று பாதிக்கப்பட்டிருந்தார். இதை அறிந்த அந்த மாணவன், மாணவிக்கு போதைப் பொருளை கொடுத்து அதை பயன்படுத்தினால் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறான். எனவே அந்த மாணவியும் போதைப் பொருளை பயன்படுத்த ஆரம்பித்தார். பிறகு அந்த மாணவி போதைக்கு அடிமையானார்.
இந்நிலையில் தினமும் போதைப்பொருள் இல்லாமல் அந்த மாணவியால் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அந்த மாணவன், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்தான். அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து கொண்டு அந்த மாணவியை அடித்து கொடுமைப் படுத்தி இருக்கிறான்.
இந்நிலையில் அந்த மாணவியின் செல்போனில் இருந்த பலாத்கார வீடியோவை மாணவியின் பெற்றோர் தற்செயலாக பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களது மகள் போதைக்கு அடிமையாகி உள்ளததை அறிந்த பெற்றோர் மாணவியை வயநாட்டிலுள்ள போதை மீட்பு மையத்தில் சேர்த்தனர். இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு அந்த மாணவி நலமடைந்து திரும்பினார்.
இதையடுத்து, அந்த மாணவியின் பெற்றோர் கண்ணூர் காவல் நிலையத்தில், அந்த மாணவன் மீது புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. அந்த மாணவன் இதே போல் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மாணவன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர்.
சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுதத்திய பின்னர் அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து அவனை நீக்கியது. மேலும் அந்த மாணவனுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.