சென்னையை அடுத்துள்ள கோவிலம்பாக்கம் ஓம்சக்தி நகரை சேர்ந்த கோபி மற்றும் சிந்துஜா உள்ளிட்ட இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2019 ஆம் வருடம் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கோபி ஆடிட்டராக பணியாற்றி வருவதாகவும், இதற்கு முன்னர் அவர் பலரிடம் கடன் வாங்கி அரிசி மண்டி, டூவீலர் ஷோரூம், ஏல சீட்டு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு அதில் பெரும் நஷ்டம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
மேடவாக்கம் வடக்குப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் கோபி கடந்த 13 ஆம் தேதி தன்னுடைய மனைவி சிந்துஜாவை அழைத்துக் கொண்டு கோவிலம்பாக்கத்தில் இருக்கின்ற தன்னுடைய தந்தை வீட்டில் விட்டுவிட்டு ஆந்திர மாநிலத்துக்கு செல்வதாக கூறி சென்று விட்டார்.
மேலும் தன்னிடம் கடன் வாங்கியவர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ளதாக கூறிச் சென்ற கோபி கடந்த 24ஆம் தேதி மனைவிக்கு போன் செய்திருக்கிறார். அதன்பிறகு கோபியை தொடர்பு கொள்ள இயலாமல் போனதாக சொல்லப்படுகிறது.
இத்தகைய நிலையில், கோபிக்கு கடன் கொடுத்தவர்கள் சிந்துஜாவை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தன்னுடைய மாமனார் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோபியை தீவிரமாக தேடி வருகின்றனர்.