தமிழகத்தில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருப்பது சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.
இதற்கு நடுவே மறைந்த திமுகவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக அவர் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படும் இவைகளுக்கு குடியரசுத் தலைவரை அழைத்து திறப்பு விழாவை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு நடுவே திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு முறைப்படி அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி புறப்படுகிறார். விழுப்புரம் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னை திரும்பும் அவர் உடனடியாக இரவு 8:30 மணி அளவில் டெல்லிக்கு பயணமாகுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை காலை 11 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு குடியரசுத் தலைவரை சந்தித்து திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்க இருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்தும், மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் வழங்குவதற்கு கால நிர்ணயம் செய்வது குறித்தும், நீட் விளக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது, மதம் மாறிய பட்டியில் இருந்து அவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது போன்றவை தொடர்பாக குடியரசு தலைவரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது.
பயணத்தை முடித்துக் கொண்டு நாளை இரவு 8.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டிருக்கிறது.
குடியரசு தலைவரை காலையில் சந்தித்த பிறகு இரவு அறையில் டெல்லியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்யக்கோரிய தீர்மானத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்த நிலையில் அவரையும் முதல்வர் நேரில் சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது