தற்காலத்தைப் பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது அதீத அக்கறை வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு பிள்ளைகளின் மீது தங்களுடைய விருப்பத்தை அதிகமாக திணிக்க தொடங்கி விட்டார்கள். அதுவே பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய தொந்தரவாக மாறிவிடுகிறது.
தற்காலத்து பிள்ளைகள் பெற்றோர்களின் பேச்சை எதிலும் கேட்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்போதுள்ள கல்வி அறிவு மற்றும் வெளி உலக அறிவை அவர்கள் பயன்படுத்தும் ஆற்றலை பிள்ளைகள் பெற்றிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எடுக்கும் முடிவு சரியா அல்லது தவறா என்ற இரு கருத்துக்களை தெரிவிக்க மட்டுமே உரிமை உள்ளது. மாறாக தங்களுடைய விருப்பத்தை பிள்ளைகளின் மீது திணிப்பது அவ்வளவு நல்லதல்ல.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்கா புரத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள். இவர் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் பொற்கொடி(20), இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், பொற்கொடி தனக்கு கல்லூரி விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என்று தெரிவித்ததோடு, அடிக்கடி தனக்கு வயிற்று வலி ஏற்படுவதாகவும் தெரிவித்து வந்திருக்கிறார். ஆனால் பொற்கொடியை அவருடைய பெற்றோர்கள் சமாதானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொற்கொடி கல்லூரி தேர்வு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். அங்கே மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பொற்கொடி, சம்பவம் நடைபெற்ற அன்று எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொற்கொடியின் தாயார் பிரேமா வழங்கிய புகாரின் அடிப்படையில் மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.