கடலூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபாலபுரத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு பாலச்சந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில் முனைவராக உள்ளார். இத்தகைய நிலையில் சமூக வலைத்தளம் மூலமாக பாலச்சந்தருக்கு சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களுடைய திருமணத்திற்கு இரு வீட்டைச் சார்ந்தவர்களும் சம்மதம் தெரிவித்தனர். ஆகவே அந்தப் பெண் தமிழ் முறைப்படி பாலச்சந்தரை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.
அதன் அடிப்படையில் நேற்று கடலூர் புது நகரில் இருக்கும் ஒரு தனியார் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் தமிழ் முறைப்படி பாலச்சந்தருக்கும், யீஜியோவிற்கும் திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பாக பாலச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது, சமூக வலைதளம் மூலமாக நாங்கள் காதலித்தும் சீனாவுக்கு சென்று அவரை சந்தித்து பேசிய பின்னர் எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
அதோடு தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.இத்தகைய நிலையில், நாடு கடந்து மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்ததை பார்த்து உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே மேடையில் பாலச்சந்தரின் சகோதரர் பாலமுருகன் பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.