மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் இருக்கின்ற கன்வாஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நபாலியா என்ற கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. இவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் அருகே உள்ள நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்புக்கும் இவர்களுக்கும் இடையில் சில மாதங்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், எதிர் தரப்பினர் பட்டியலின குடும்பத்தை பழிவாங்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற கடந்த 6-ம் தேதி இரவு 9 மணி அளவில் அந்த பட்டியலினத்தவரின் வீட்டிற்குள் எதிர்த்தரப்பினர் 8 பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர். வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த சமயத்தில் அவர்களை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளது.
அதோடு அவர்கள் அங்கிருந்த பெல்டால் எல்லோரையும் சரமாரியாக அடிக்க தொடங்கி விட்டனர். வீட்டில் இருந்த இளம் பெண் ஒருவரின் ஆடைகளை கிழித்து சித்திரவதை செய்திருக்கின்றன. அடி தாங்க முடியாமல் அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தை உள்ளிட்டோர் மயங்கி விழுந்து விட்ட நிலையில், அந்த 8 பேர் கொண்ட கும்பல் அந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூரமான செயலில் அந்த வீட்டில் இருக்கின்ற எல்லோரும் மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இதனை தொடர்ந்து, அடுத்த நாள் காலை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக 5 பேரை கைது செய்ததாக தெரிவித்து ராஜ்கர் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் வீரேந்திர சிங் மீதமுள்ள நபர்களை தேடி வருவதாக கூறியுள்ளார். அதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சரியான நீதி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.