அரியானாவில் சுரங்க மாபியா கும்பலால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட டி.எஸ்.பி. வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவரது சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார். அரியானாவில் நூ மாவட்டத்தில் சட்டவிரோத வகையில் நடந்து வந்த சுரங்க பணிகளை பிடிக்க நேற்று சென்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். மேலும் அவரது உடல் ஒரு குப்பை தொட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபற்றி டி.எஸ்.பி.யின் சகோதரர் மக்கன் சிங் கூறும்போது, அது எனது சகோதரரின் வேலையில்லை. அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்த பிறகுதான் அந்த பகுதிக்கு அவர் சென்றுள்ளார். இதன் பின்னால் பெரிய சதி திட்டம் உள்ளது என்று சந்தேகமாக இருக்கிறது. சுரங்க துறை உட்பட உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். மேலும் சகோதரருக்கு வந்த தொலைபேசி அழைப்பு பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். துணிச்சலான, நேர்மையான அதிகாரியான சுரேந்திராவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். அவருடன் பாதுகாப்புக்கு சென்ற துப்பாக்கி ஏந்திய அதிகாரியிடமும், விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சம்பவத்தின்போது பாதுகாப்புக்கு வந்த அதிகாரி குதித்து தப்பி விட்டார்.
தவுடு மலை பகுதியில் சோதனை நடத்த டி.எஸ்.பி. தனது அலுவலக வாகனத்தில் சென்றுள்ளார். சம்பவம் பற்றி நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறும்போது, டி.எஸ்.பி. தனது வாகனம் அருகே நின்றிருந்தார். அப்போது லாரி ட்ரைவரை நிறுத்தும்படி சைகை காட்டினார். சட்டவிரோத குவாரி பொருட்களை ஏற்றி வந்த லாரியின் ட்ரைவர் நிற்காமல் காவல் அதிகாரி மீது ஏற்றி விட்டு சென்றார் என கூறியுள்ளார். சில மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்பு அரியானா காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். லாரி கிளீனரான இக்கார் என்பவர் காவல்துறையினர் என்கவுண்ட்டருக்கு பின் சுட்டு பிடிக்கப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது. முதலமைச்சர் கட்டார், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். குற்றவாளி ஒருவர் கூட தப்ப முடியாது என கூறியுள்ளார்.