நாட்டில் இருக்கும் பெரிய, பெரிய பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பெரிய மனிதர்களுக்கு நிச்சயமாக பினாமி என்று யாராவது ஒருவர் இருக்கத்தான் செய்வார்கள்.
அப்படி பினாமியாக இருப்பவர்கள் நிச்சயம் அவர்களுடைய நம்பிக்கையை பெற்றவர்களாக மட்டும்தான் இருக்க முடியும். அப்படி தங்களுடைய முழுமையான நம்பிக்கையை பெறாத யாரோ ஒருவரிடம் தங்களுடைய சொத்துக்களின் அதிகாரத்தை ஒப்படைத்தால், நிச்சயம் அது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தரும்.
ஆனால் தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் நன்றாக பழகி, நன்றாக புரிந்து கொண்ட, நம்முடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பவர்கள் கூட சில நேரம் நமக்கு துரோகமிழைத்து விடுகிறார்கள்.அதற்கு காரணம் பணம்.ஒரு மனிதன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும் அவனை தகாத வழிக்கு திருப்பும் வல்லமை கொண்ட ஒரே விஷயம் பணம் மட்டும்தான். பணம் நினைத்தால் பத்தும் செய்யும் என்பதை இப்படியும் சொல்லலாமோ.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருக்கின்ற சர்வாய் புதூர் சாமியாருக்கு கிணறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்(45). இவர் தன்னுடைய மனைவி மற்றும் தாயாருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றார். இவருடைய நண்பர் தலைவாசல் அருகே இருக்கின்ற மணிவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த கணேசன். இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர், இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன்.
இந்த நிலையில், கணேசனும் கோபாலகிருஷ்ணனும் 2 பைகளில் 2 கோடி ரூபாய் பணத்தை லோகநாதனிடம் வழங்கி பாதுகாப்பாக வைத்திருக்குமாறு தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 7ம் தேதி வீட்டை பூட்டி விட்டு அருகில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு சென்று வந்ததாகவும், அப்போது வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாகவும் தலைவாசல் காவல் நிலையத்தில் லோகநாதன் புகார் ஒன்றை வழங்கினார்.
இந்த புகார் குறித்து காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லோகநாதன், கணேசன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் வழங்கியதாக தெரிகிறது.
காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் லோகநாதன் அருகில் இருக்கின்ற கரும்பு தோட்டத்தில் அந்த பணத்தை மண்ணில் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கரும்பு தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த 1 கோடி ரூபாய் பணத்தை மீட்டனர். ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன் வழங்கிய பணத்தை அபகரிக்கும் விதமாக கரும்புத் தோட்டத்திற்குள் பணத்தை மறைத்து வைத்து கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய லோகநாதனை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.