ஒரு சிலர் தவறுகள் செய்யும்போது நாம் செய்வது தவறு என்று உணர்ந்து கொள்வதில்லை. ஆனால் தவறை செய்து முடித்துவிட்டு அதன் பிறகு அந்த தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக பல விபரீத முடிவுகளை மேற்கொள்வார்கள். அந்த விபரீத முடிவானது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாக்கிவிடும்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம் நந்தநல்லூரை அடுத்துள்ள பொட்டல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுடலை(53). இவர் கடந்த 2018 ஆம் வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வடக்கின் விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 4 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 10 வருடங்கள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அன்புச்செல்வி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு நடுவே நீதிமன்ற வளாகத்திலேயே தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு பயந்து சுடலை விஷம் அருந்தியுள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு நீதிமன்றத்திலேயே மயக்கம் அடைந்து அவர் சரிந்தார். அதன் பிறகு தான் அவர் விஷம் கொடித்தது தொடர்பாக காவல்துறையினருக்கு தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு அவசர ஊர்தி மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே சுடலை பரிதாபமாக உயிரிழந்தார். கைது செய்யப்பட்ட நபர் தண்டனை விவரங்களை அறிந்து நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. குறிப்பாக அவருக்கு எங்கிருந்து விஷம் கிடைத்தது என்பது தொடர்பாக தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது.