நெல்லை, பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவிகள் தலை முடியை பிடித்து சண்டை போட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகரின் முக்கிய பேருந்து நிலையமாக பாளை பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பஸ் நிலையம் வழியாக தினமும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் அவர்களது கிராமங்களுக்கு திரும்புவார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், அரசு உதவி நிதி பெறும் சாரா டக்கர் பள்ளி மாணவிகள் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, பேருந்து நிலையத்தில் மாணவிகள் சிலருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இந்த சண்டையை அங்கிருந்த பள்ளி ஆசிரியை தடுக்க முயன்றார் இருந்தும், விடாபிடியாக தலை முடியை பிடித்து இழுத்து குடிமிபுடி சண்டை போட்டுவிட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகளின் இந்த சண்டை சமூக வலைதளங்களில் வெளியானது. சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளை வைத்து இன்று காலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று கைகலப்பில் ஈடுபட்ட மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பேருந்தில் இடம் பிடிப்பதற்காக ஏற முயன்ற போது இந்த சண்டை ஏற்பட்டதாக மாணவிகள் கூறியுள்ளனர். இதை அடுத்து மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த பேருந்து நிலையத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.