பீகாரின் முசாபர்பூரில் இயங்கி வந்த அரசு காப்பகத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட, சம்பவம் சில வருடங்களுக்கு முன் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேப்போல மீண்டும் ஒரு சம்பவம் தற்போது அங்கு நடந்துள்ளது.
மாநில தலைநகர் பாட்னாவில் இருக்கும் அரசு காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த மூன்று சிறுமிகள், காப்பக சூப்பிரணடு தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த மூன்று சிறுமிகள் வாக்குமூலம் அளித்தனர். அதுமட்டுமின்றி, மேலும் சில சிறுமிகள் சூப்பிரண்டு தங்களை அடிக்கடி அடிப்பதாக கூறினர்.
இதைத்தொடர்ந்து காப்பக சூப்பிரண்டை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். பாலியல் வன்கொடுமை புகாரில் காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.