தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை வெட்டிக் கொலை செய்த பெண்ணின் பெற்றோரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி.50. இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியின் மகள் ரேஷ்மா (19).
இவர் அதே ஊரைச்சேர்ந்த தனது உறவினரான மாணிக்கராஜ் (29) என்பவரை கடந்த மாதம் மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கு ரேஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணிக்கராஜ், ரேஷ்மா தம்பதி ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 25)வீட்டில் இருந்த மாணிக்கராஜ், ரேஷ்மா தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
ரேஷ்மாவின் தந்தை மற்றும் தாய் இருவரும் புதுமண தம்பதியினரை வெட்டி படுகொலை செய்ததாக விசாரணையில்தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த எட்டயபுரம் காவல்துறையினர் கொலையாளிகள் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (ஜூலை 26) தம்பதியினரை வெட்டி படுகொலை செய்த பெற்றோர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.