சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள பூலாவரி அக்ரஹாரம் சின்ன ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 48). இவர் தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா (45). தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, மல்லிகா தனது கணவரை பிரிந்து ராஜபாளையம் அரிமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள எஸ். பாப்பாரப்பட்டி சோலை கவுண்டர் காடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடன் மல்லிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதற்கிடையே தனது மனைவி மல்லிகா தன்னை விட்டு பிரிந்து செல்ல முருகேசன்தான் காரணம் என எண்ணிய மாணிக்கம், முருகேசனுடன் தகராறு செய்துள்ளார்.
இருப்பினும் முருகேசன் தொடர்ந்து மல்லிகாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முருகேசன் நைனாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாணிக்கம், முருகேசனை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முருகேசனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில், படுகாயம் அடைந்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.