நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளையில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருடைய மகன் பேச்சிராஜா(26). ஐ.டி.ஐ. படித்த இவர் கட்டிடதொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், மூன்று பிறந்து மாதம் ஆன கைக்குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பேச்சி ராஜா இன்று காலை 9.30 மணி அளவில் வேலைக்கு செல்ல வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டார். அப்போது அவருடன் அதே பகுதியில் உள்ள மற்றொரு வாலிபரும் சென்றார்.
இருவரும் சிறிது தூரத்தில் மதுரை பைபாஸ் ரோட்டில் இருக்கும், சாய்பாபா கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் அவரை வழிமறித்து பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபரை எச்சரித்து விரட்டினர். பிறகு அவர்கள் பேச்சிராஜாவை அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே பேச்சிராஜா அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை துரத்தி சென்ற அந்த கும்பல் அவரை ஓடி, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த தச்சநல்லூர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பேச்சிராஜா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பேச்சிராஜாவை கொலை செய்த கும்பல் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேச்சிராஜா மீது கடந்த 2020 ஆம் வருடம் நடந்த மாசான மூர்த்தி என்பவர் கொலை வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அந்த முன் விரோதத்தில் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.