தலைநகர் சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள் இடையே பேசிய ஓபிஎஸ் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை நீக்க தொண்டர்களுக்கு தான் அதிகாரம் இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என்றே கட்சியின் அடிப்படை விதிகளை எம்ஜிஆர் வகுத்தார் என்று கூறியிருக்கிறார்.
அதிமுகவின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்று தங்களுக்கு நன்றாக தெரியும் அவரது பெயரை நான் சொல்ல மாட்டேன். தன்னுடைய இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிவடைந்தது. மேலும் 2026 ஆம் ஆண்டு வரையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் இருக்கிறது தேர்தல் ஆணையத்திலும் இந்த ஆவணங்கள் தான் இருக்கின்றன.
எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் கட்டி காத்த அதிமுகவின் சட்ட விதிகளை காப்பாற்றுவதற்கு தற்போது நாம் தர்மயுத்தம் நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.
எந்த அளவுக்கு அதிமுகவின் சட்ட விதிகளை சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகளை சிதைத்துவிட்டனர். சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேலாக மக்களின் தீர்ப்பு என்று ஒன்று இருக்கிறது. மிக விரைவில் அது வரும் நாம் அனைவரும் தர்மத்தின் பக்கம் நியாயத்தின் பக்கம் நிற்கின்றோம் என்று கூறியிருக்கிறார்.
எதற்கும் பயம் கொள்ளாமல் துணிந்து நில்லுங்கள் முன் வரிசையில் நாங்கள் நின்று எதிர்வரும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவோம். தேர்தல் முடிவு வெளியாகும்போது எல்லாம் தெரியவரும் என்று கூறி இருக்கிறார் ஓபிஎஸ்.