திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக அருணாசலேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்ற நிலையில், சாமி தரிசனத்திற்கு பிறகு மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.
இத்தகைய நிலையில், பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது. ஆகவே பௌர்ணமி தினத்தன்று மலையை சுற்றி 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான சித்ரா பௌர்ணமி நாளை இரவு 11:59 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.
அதன் பிறகு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு 11:33 மணி அளவில் இது நிறைவு பெறுகிறது. ஆகவே பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வேலூரில் இருந்து 60 பேருந்துகள், சென்னையில் இருந்து 50 பேருந்துகள், திருப்பத்தூரில் இருந்து 40 பேருந்துகள், ஆற்காட்டில் இருந்து 30 பேருந்துகள் உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன.
அதேபோல பெங்களூருவில் இருந்து 10 பேருந்துகளும், தாம்பரம் சோளிங்கரிலிருந்து சுமார் 5️ பேருந்துகள் என்று ஒட்டுமொத்தமாக 200 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் நாளை காலை முதல் 2 நாட்கள் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.