சேலம் அருகே கடையம்பட்டி ஜோடுகுளி என்ற பகுதியில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செல்வம்( 63) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளை அடிக்க 3 பேர் முயற்சி செய்திருக்கிறார்கள்.
அப்போது ஒருவர் வெளியே பாதுகாப்புக்காக நின்றார் மற்ற இருவரும் காஸ் சிலிண்டரை வைத்து கேஸ் வெல்டிங் மூலமாக இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தனர் அப்போது சத்தம் கேட்டு கட்டிட உரிமையாளர் செல்வம் வெளியே வந்து பார்த்துள்ளார். உடனே ஏடிஎம் மையத்தின் வெளியே நின்றவர் அங்கிருந்து தப்பி சென்றார். ஏடிஎம் மையத்துக்குள் 2 பேர் இருப்பதை பார்த்த செல்வம் ஷட்டரை பூட்டி விட்டார்.
உடனடியாக இது தொடர்பாக தீவட்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து ஷட்டரை திறந்து உள்ளே இருந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த ரைஸல்கான் (20) உத்தர பிரதேசத்தை சார்ந்த 17 வயதான நபர் உள்ளிட்டோர்தான் ஏடிஎம் மையத்தில் இருந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தப்பி சென்றவரை தீவிரமாக தேடி வருகின்றன. ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்துக் கொடுத்த கட்டிட உரிமையாளர் செல்வத்தை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.