தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை;
மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள், திருவள்ளூரில் இன்னொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தைத் தொடர்ந்து, சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்ட சம்பவமும், மேலும் திருப்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், செங்கல்பட்டில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்கொலை முடிவு என்பது எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவ, மாணவிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாணவர்கள் அதனை மனதில் வைத்து பூட்டி கொள்ளாமல் பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ மனம் திறந்து சொல்லுங்கள். அப்போதுதான் அதற்கு சரியான தீர்வு காண முடியும். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் உங்களுக்கு வராது.
நம் நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ, மாணவிகள் படிப்பில் முழுகவனம் செலுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தர வேண்டும். மனதை உறுதியோடு வைத்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.