தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் தற்போது 100 டிகிரி பாரான்ஹீட்டை கடந்துள்ளது. வெயிலின் தாக்கம் திருப்பத்தூர், ஈரோடு போன்ற பகுதிகளில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரான்ஹீட் வரையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சுட்டெரிக்கும் இந்த வெயில் தாக்கம் காரணமாக, அணைதினமும் பணிக்கு செல்வோர், கட்டுமான தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப்பை சந்திக்க நேர்கிறது. நன்பகல் சமயத்தில் வெப்பநிலை இயல்பை விட 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் வெயில் தாக்கம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வறண்ட வானிலை, தரைக்காற்று உள்ளிட்டவை தான் இந்த வெப்பநிலை அதிகரித்திருப்பதற்கான காரணம் என்று தெரிவிக்கிறார். தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ஸ்ரீகாந்த் அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் புறநகர் பகுதிகளான அம்பத்தூர் தாம்பரம் ஆவடி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கலாம் என்றும், வெப்ப அலைகள் வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த வெயிலின் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் முன்பே அறிவித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் வெயிலை முடிந்து வரையில் தவிர்த்து நிழலில் இருப்பதை எல்லோருக்கும் நல்லது எனவும், அதனை தவிர்த்தால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.