தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் ஆரம்பித்த நிலையில், புயல் சின்னம் காரணமாக, பரவலாக மழை பெய்து வந்தது. ஆகவே தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டது.
இத்தகைய நிலையில்தான் தமிழகம், புதுவை போன்ற பகுதிகளில் நேற்று 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 108 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது.
இதனால் கிருஷ்ணகிரி நகரில் பகல் நேரத்தில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கரூர், பரமத்தி போன்ற இடங்களில் 105 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 104 டிகிரியும் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இத்தகைய நிலையில், தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அன்றாட பணிகளை செய்வதே கடுமையான சிரமமாக மாறி இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக வெயிலின் தாக்கம் கடுமையாக வாட்டி வதைக்கும் சூழ்நிலையில், வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை எனவும், அன்றாட பணிகள் எதுவும் செய்ய இயலவில்லை என்றும் சென்னை மற்றும் வேலூர் மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் தான் உச்சி வெயில் என்று சொல்லப்படும் 11 மணி முதல் மாலை 4:00 மணி வரையில் வெயிலில் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.