நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சேர்ந்த மகாலட்சுமி (25) மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி என்ற கிராமத்தைச் சார்ந்த பூண்டியான் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவருக்கு முகநூல் பக்கம் மூலமாக அறிமுகமாகி பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர் 25 நாட்களுக்கு முன்னர் மகாலட்சுமி சொத்து சம்பந்தமான பிரச்சனையை காரணமாக, தெரிவித்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு போனவர் மீண்டும் திரும்பி வரவில்லை. மணிகண்டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மிக விரைவில் வந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர் வராததால் மணிகண்டன் சில தினங்களுக்கு முன்னர் வளத்தி காவல்துறையிடம் புகார் வழங்கினார். அதில் மகாலட்சுமி போகும்போது 8 பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில், மகாலட்சுமி முதலில் வேலூரைச் சேர்ந்த ஒருவரை இதே பாணியில் திருமணம் செய்ததும், அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து திருமணம் செய்து மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் 5வதாக மணிகண்டனை திருமணம் செய்து நகை மற்றும் பணத்துடன் அவர் தலைமறைவாகி இருக்கிறார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
அதன் பிறகு கோவை விமான நிலையம் அருகே சொந்தமாக கார் வைத்து வேலை பார்த்து வரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குமாரபாளையத்தைச் சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6வதாக திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தது தெரியவந்தது. காவல்துறையினர் இவரை நேற்று கைது செய்தனர்.