மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் விஜயராஜன் என்பவரின் மகன் ஆனந்தகுமார் (22). மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் போது இவருடைய தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
இத்தகைய நிலையில், ஆனந்தகுமார் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தெற்கு வாசல் பகுதி அருகே பயணமாகி கொண்டு இருந்தபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இருசக்கர வாகனத்தை விட்டு கீழே இறங்கி தப்பி ஓட முயற்சி செய்திருக்கிறார்.
ஆனாலும் அவரை விடாமல் பின் தொடர்ந்து, துரத்திச் சென்ற அந்த கும்பல் அவரை நடு ரோட்டில் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதன் காரணமாக, படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தெற்கு வாசல் காவல் துறையினர் ஆனந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
அதோடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமீபத்தில் நடந்து முடிந்த சித்திரை திருவிழாவின்போது ஆனந்தகுமார் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் உண்டானதாகவும், அதன் காரணமாகவே இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் பட்ட பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரை சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.