எந்த ஒரு விஷயத்திற்குமே கோபம் ஒரு தீர்வாக இருக்காது அது பலருக்கு தெரிவதில்லை. பொதுவாக ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற ஒரு பழமொழி இருக்கிறது அதனை சரியாக புரிந்து கொண்டு நடந்தால், நிச்சயமாக தேவையில்லாத இடங்களில் யாரும் கோபப்பட மாட்டார்கள்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் உணவு விநியோகம் செய்யும் ஊழியரான திருமலைவாசன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவருடைய வேலையை முடித்துவிட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் வந்த பார்த்திபன் என்பவரின் இருசக்கர வாகனம் திருமலை வாசனை இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஆத்திரம் கொண்ட திருமலைவாசன் இது தொடர்பாக பார்த்திபனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இது குறித்து திருமலை வாசனுக்கும், பார்த்திபனுக்கும் இடையில் வாய் தகராறு உண்டாகி இருக்கிறது.பின்பு அந்த வாய் தகராறு கைகளைப்பாக மாறி இருக்கிறது மேலும் பார்த்திபனும், அவருடன் அந்த இன்னொரு நபரும் ஒன்றிணைந்து திருமலைவாசன் மீது கொடூரமான கொலை வெறி தாக்குதலை நிகழ்த்தி இருக்கின்றனர்.
இதன் காரணமாக, படுகாயம் அடைந்த திருமலைவாசன் ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கி சரிந்தார். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு நபர் இந்த சம்பவத்தை தன்னுடைய கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார் தற்சமயம் அது வேகமாக பரவி வருகிறது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள காட்பாடி காவல் துறையினர் காயமடைந்த திருமலைவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது தாக்குதல் நடத்திய பார்த்திபன் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அதோடு பார்த்திபனுடன் வந்த இன்னொரு நபரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரத்தில் சட்டப்படியான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இணையதளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவை வைத்துக்கொண்டு யாரும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று காவல்துறையினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இதில் இன்னொரு வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் சமூக வலைதளம் என்பது நல்ல விஷயத்திற்கும் பயன்படுகிறது பல சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுகிறது.
இப்படி ஒரு பயங்கர தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதனை எந்தவித பதற்றமும் இல்லாமல் வீடியோ பதிவு செய்த நபரை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று கூட தெரியவில்லை.
அவர் நினைத்திருந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து திருமலை வாசனை தாக்குதலில் இருந்து காப்பாற்றி இருக்கலாம்.ஆனால் இவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு அதன் பிறகு அந்த வீடியோ வைரலாக பரவி அதனைப் பார்த்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
தற்கால இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டால் அதனை வைரலாக பரப்புவது மட்டும் சமூக அக்கறையல்ல.நம் கண் முன்னே ஒரு தவறு நடைபெற்றால் அதை நம்மால் முடிந்த விதத்தில் தடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் அதுதான் உண்மையான சமூக அக்கறை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.