ஏஐ துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு துறையிலும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஏஐ தொழில்நுட்பத்தை பல முன்னணி ஐடி நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இந்த தொழில்நுட்பத்தால், பல ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். இந்நிலையில் தான், ஏ.ஐ. துறை குறித்து பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வு குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2027ஆம் ஆண்டிற்குள்) ஏ.ஐ. துறையில் 1.5-2 மடங்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதனால் ஏ.ஐ. துறையில் 23 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஏ.ஐ., துறையில் திறமையான பணியாளர்களின் தேவை அதிகமாக இருக்கிறதாம்.
கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து ஏ.ஐ., தொடர்பான வேலைவாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. அதே காலகட்டத்தில் ஊதியமும் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட போன்ற நாடுகளில் ஏ.ஐ. பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஜெர்மனியில் 2027ஆம் ஆண்டுக்குள் ஏ.ஐ. பணியாளர்கள் 70% பற்றாக்குறை ஏற்படும்” என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.