fbpx

நம்பிக்கை துரோகி எடப்பாடி…! வரும் 2024 தேர்தலில் விடப் போவதில்லை…! ஓபிஎஸ் விமர்சனம்

நம்பிக்கைத் துரோகி எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளின் வலுவின்மையில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு இதைத்தான் உணர்த்தியுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில், அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்தத் தோல்வி ஒவ்வொரு தொண்டனையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பல காரணங்களால் பொதுமக்கள் திமுக அரசின் மீது மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்ற நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாய்ப்பினை பெறாமல், வரலாறு காணாத படுதோல்வி அடைந்திருப்பதற்கு காரணம் உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கைத் துரோகங்கள் தான். இவற்றைப் பார்க்கும்போது, “பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை, பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான்” என்ற அண்ணாவின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது.

’யாரை கேட்டு இப்படி பண்ணீங்க’..!! ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய எடப்பாடி..!! பரபரக்கும் அதிமுக..!!

2021ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. அதிமுக இடைத்தேர்தல் வரலாற்றில் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இதுவே முதல் முறை.

இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான். இரட்டை இலைச் சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்ற அறிவுரையை ஏற்றுக்கொண்ட நிலையில், உச்ச நீதிமன்ற அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து தன்னிச்சையாக ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்து, அந்த வேட்பாளரின் பெயரை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினர். ஆனால், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிகமான வாய்ப்புகள் இருந்தும், இரட்டை இலைச் சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்தோம்.

எனினும் அதிமுக படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால், அதற்கு முழுகாரணம் எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான். ‘தான்’ என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில், அதிமுகவிற்காக உழைத்தவர்களையும், தியாகம் செய்தவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான் தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் அதிமுக வெற்றி பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி விரைந்து எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

விசைத்தறி நெசவாளர்களுக்கு குட்நியூஸ்!... இனி 1000 யூனிட் இலவச மின்சாரம்!... சலுகை அறிவித்த முதலமைச்சர்!

Sat Mar 4 , 2023
விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விசைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 700 யூனிட் இலவச மின்சாரம் போதவில்லை என்று நெசவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில், தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசைத்தறிக்கு 3 […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like