தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,10,809ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 17,858 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா மீண்டும் தீவிரமாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி பொதுவாழ்க்கையில் ஈடுபடும் அரசியல் தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸும் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.