பீகாரில் நடந்து வரும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது..
பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கியது.. இரு கட்டங்களாக நடத்தப்பட இந்த கணக்கெடுப்பில் மக்களின் சாதி, துணை சாதி, பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.. இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.. அந்த மனுக்களில் பீகார் அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முரணானது என்றும், இதனால் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு பாதிக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்..
இந்த மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது இந்த வழக்குகளை விசாரணை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், மனுதாரர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுரை வழங்கி மனுக்களை தள்ளுபடி செய்தனர்..
மேலும் “இது ஒரு விளம்பர நல வழக்கு. எந்த சாதியினருக்கு எவ்வளவு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் எவ்வாறு வழங்க முடியும்? மன்னிக்கவும்.. இதுபோன்ற உத்தரவுகளை எங்களால் பிறப்பிக்க முடியாது. யாருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் (அரசு) எவ்வாறு தீர்மானிப்பார்கள்?… எனவே இது போன்ற விளம்பர மனுக்களை நாங்கள் ஏற்க முடியாது.” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.