சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், சுடுகாட்டில் சடலங்கள் குவிந்து கிடப்பதால், தகனம் செய்ய முடியாமல் மக்கள் தங்கள் உறவினர்களை தெருவில் தகனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா இல்லாத சமூகத்திற்கான சீன நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த மாதம் திடீரென ரத்து செய்யப்பட்டன. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் திடீரென கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், பாதிப்புகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகியுள்ளது.
மருத்துவமனைகளும் தகனக் கூடங்களும் இப்போது பிணங்களால் நிரம்பி வழிகின்றன. பல உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாங்காய் மாநிலம் ஹுய்னான் பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் இறந்த உறவினரின் உடலை குடும்பத்தினர் எரிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது தகனம் இல்லை என சீன நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை விட, தெருக்களில் இறந்தவர்களின் ஆடைகளை எரிக்கிறோம் என்று சீன அதிகாரிகள் தற்போது தெளிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸால் 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 5,258 எனவும் சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.