இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 38 லட்சம் மோசடி செய்த ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கும்பகோணம் அருகே உள்ள ஒரு ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு சேர்ந்துள்ளார். ஜிம் உரிமையாளரான சாக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மகுமரன் என்பவர் திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி பெண்ணிடம் பழகியுள்ளார்.
புதியதாக ஒரு ஜிம் திறக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என அந்த இளம்பெண்ணிடம், பத்மகுமரன் கேட்டுள்ளார். இதை நம்பி அந்தப் பெண்ணும், தனது நகைகளை அடகு வைத்து, 38 லட்சம் ரூபாயை, பத்மகுமரனின் வங்கி கணக்கில் அனுப்பியுள்ளனர். இந்த பணத்தை கொண்டு, பத்மகுமரன் செட்டிமண்டபம் பகுதியில் புதிய ஜிம் ஒன்றை திறந்தார். இருவதும் காதலித்து வந்த நிலையில், பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
அந்த பெண் கர்பமாகவே, பத்மகுமரனிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இதன்பிறகு, அந்த பெண்ணிடம், பத்மகுமரன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண், பத்மகுமரனை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் அந்த இளம்பெண் முற்றிலுமாக தவிர்த்துள்ளார். இதையடுத்து பத்மகுமரனின் தாய் புனிதாதேவியை நேரில் சந்தித்து நடந்த விபரங்களை அந்த இளம் பெண் கூறியுள்ளார். அப்போது, புனிதாதேவி, என் மகன் உன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவான். கர்ப்பத்தை கலைத்து விடு என மிரட்டியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண், கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில், புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு, பத்மகுமரன், இளம் பெண்ணிடம் வாங்கிய 38 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரை அந்த இளம்பெண் வழக்கை வாபஸ் பெற்றார்.
அதன் பின்னரும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், கர்பத்தை கலைக்கவில்லையென்றால், கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் துாக்கமாத்திரையை சாப்பிட்டுள்ளார். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பெண் அளித்த புகாரின் பேரில் பத்குமரனை திருவிடைமருதுார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.