தென்காசி மாவட்டத்தில் பாமக மகளிர் அணி தலைவி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் முத்தையா. இவரது மகள் மாரியம்மாள். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் குருவிகுளம் யூனியன் மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார் மாரியம்மாள். தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் செய்ததையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மாரியம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த மாரியம்மாளுக்கும் முத்துகாலாடி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மாரியம்மாள் வேறொரு வாலிபருடன் பழக ஆரம்பித்து முத்துகாலாடியிடம் இருந்து விலக ஆரம்பித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பன் சுப்பையா பாண்டியன் என்பவரோடு சேர்ந்து மாரியம்மாலை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து முத்துகாலாடி மற்றும் சுப்பையா பாண்டியன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.