மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேரி பகுதியில் மார்ச் 19 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட அந்த சடலம் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முக்குளத்தை சேர்ந்த மலையரசன் (36) என்பதும், இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் பணிபுரிந்த தனிப்படை காவலர் என்பதும் தெரியவந்தது.
முன்னதாக இவரது மனைவி பாண்டி செல்வி கடந்த 1ஆம் தேதி மானாமதுரை பகுதியில் வாகன விபத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து காவலர் மலையரசன், மனைவி மரணம் குறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் மலையரசன் சடலமாக மீட்டனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுனரை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று காவலர் மலையரசன் இவரது ஆட்டோவில் தான் சென்றுள்ளார். அப்போது பணத்திற்கு ஆசைப்பட்டு ஆட்டோ டிரைவர் தான் மலையரசனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். காவலர் கொலை வழக்கில் போலீசார் ஒருவரை சுட்டுப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.