அதிமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”முதல்வர் முக.ஸ்டாலின் வீட்டிலிருப்பதைவிட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது சிறந்ததாக இருக்கும் என்பதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டார் என்றும் தெரிவித்தார். மேலும், அவர் விரைவில் பூரண நலம்பெறுவார் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடையே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையின்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
![கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்ட விவகாரம்..! அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு விளக்கம்..!](https://1newsnation.com/wp-content/uploads/2020/01/DuraiMurugan-1.jpg)
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்டது தொடர்பாக பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், கே.பி.முனுசாமியின் குவாரிக்கு ஏற்கனவே அரசு சீல் வைத்ததை சுட்டிக்காட்டினார். புதிதாக 20 குவாரிகள் டெண்டர் விட்டதில் அதிகபட்ச தொகை செலுத்தி கே.பி.முனுசாமி குவாரி எடுத்திருப்பதாகக் கூறிய அமைச்சர், குவாரி உரிமம் வழங்கப்பட்டதில் எந்த விதிமீறலும் நிகழவில்லை என்று தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுவதாக கூறப்படும் விமர்சனங்களில் சிறிதும் உண்மை இல்லை என்றும் அரசியலில் இது போன்று குற்றம்சாட்டுவது வழக்கம்தான் என்றும் கூறினார்.