திருவாரூர் அருகே பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த M.ராஜேந்திரன் (52) என்பவர் கடந்த ஏப். 5ம் தேதி அன்று பணியின் நிமித்தமாக மண்ணுக்குமுண்டான் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மயக்கமடைந்து சிகிச்சைக்காக அருகிலுள்ள சித்தமல்லி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் உயிரிழப்பு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.