தற்போது நேற்று பிறந்த குழந்தை முதல், நாளை இறக்கப்போகும் மூதாட்டி வரையில் அனைவரின் கைகளிலும் செல்போன் இருக்கிறது.ஆனால் இந்த செல்போன் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகிறது, பல தீமையான விஷயங்களுக்கும் பயன்படுகிறது. அதனை பயன்படுத்துபவர்களின் கையில் தான் இருக்கிறது நல்லதும், கெட்டதும். அதனை பலரும் இதுவரையிலும் அறிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இந்த செல்போனால் சமூகத்திற்கு நல்ல விளைவுகள் ஏற்படுகிறதோ இல்லையோ தீய விளைவுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது.
அதிலும் தற்போதைய இளம் தலைமுறையினர், அது ஆணோ அல்லது பெண்ணோ பார்த்து ஒரு நாள் பேசிவிட்டால் போதும் மறுநாள் அவர்களுடைய மொபைல் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு நட்ட நடு இரவில் கூட சாட்டிங் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஆனால் அப்படி செய்வது ஆண்களுக்கு பெரிய அளவில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதே சமயம் இளம் பெண்களுக்கு இதுபோன்ற செயல் பல பாதகங்களை விளைவித்து விடுகிறது.
அந்த வகையில், சென்னை திருவொற்றியூர் எஸ்பி கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் பரத்(19). இவர் ஆர்கே நகரில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவருக்கும், பாரிமுனையில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவி ஒருவருக்கும் பழக்கம் உண்டாகி இருவரும் நண்பர்களாக பழகி வந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நாளடைவில் இருவரும் கைப்பேசி எண்களை பகிர்ந்து கொண்டு அவ்வப்போது வாட்ஸப் சாட்டிங் மற்றும் வீடியோ கால் உள்ளிட்டவற்றில் பேசியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் அந்த பெண்ணுடன் நட்பாக பழகி வந்த மாணவன் பரத் நாட்கள் செல்ல, செல்ல தன்னுடைய பேச்சிலும், நடவடிக்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார். அது அந்த மாணவிக்கும் தெரிந்து விட்டது.. அதோடு அந்த மாணவியை அடிக்கடி வீடியோ கால் செய்ய வேண்டும் என்று சொல்லி தொந்தரவு செய்து வந்திருக்கிறார் பரத்.
இந்த சூழ்நிலையில்தான் கடந்த 15 ஆம் தேதி இரவு கல்லூரி மாணவன் பரத் இந்த மாணவிக்கு வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசியதுடன் அவருடைய உடையை கழட்ட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி ,அதிர்ச்சியில் போன் இணைப்பை துண்டித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ச்சியாக அந்த மாணவிக்கு பரத் போன் செய்து தொந்தரவு வழங்கியுள்ளார்.
அவருடைய தொடர் இம்சையால் பொறுமை இழந்த மாணவி இந்த சம்பவம் குறித்து தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பரத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
அத்துடன் மாணவன் பரத்தின் தொலைபேசியை காவல் துறையினர் பார்த்தபோது அவர் பல பெண்களிடம் இது போல வீடியோ காலின் மூலமாக ஆபாசமாக பேசுவது, ஆபாசமாக சாட்டிங் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.