மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், இரவு நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த பெண்ணுக்கு போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்த இளம் பெண்ணை போலீஸ்காரர் பிடித்து இழுத்து தகாத முறையில் தொடுவதைப் பார்க்க முடிகிறது. ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்பனா டாக்கீஸ் அருகே இந்தச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்து, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில காவல்துறையை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. “பாஜக ஆட்சியில், காவலர்களே வேட்டையாடுபவர்களாக மாறிவிட்டனர். போபாலில் உள்ள அல்பனா டாக்கீஸ் அருகே, இரவில் தனிமையில் நின்ற பெண்ணிடம் காவலர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது காவல்துறையின் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்தின் கீழ் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது உண்மையிலேயே வெட்கக்கேடானது” என்று மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான சங்கீதா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.