2023 – 24ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடந்து வருகிறது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து துறை வாரியான ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் நடத்த உள்ளதாகவும், அதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக, அமைச்சரவைக் கூட்டம் விரைவில் கூட உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் அமைச்சரவை கூடி, நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 3-வது வாரத்தில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.