தென்காசி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவ்வப்போது பாலியல் சீண்டல்களிலும் இரட்டை அர்த்த வசனங்களிலும் பேசி வந்ததாக தெரிகிறது. இதே போன்ற வேலையை இவர் 30க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் செய்திருக்கிறார். இது தொடர்பாக மாணவிகள் இணைந்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு இருக்கின்றனர். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தென்காசி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஆசிரியர் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்தால் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக மாணவிகளும் பெற்றோரும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை தமிழ் ஆசிரியர் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. மாணவிகள் மற்றும் பெற்றோரும் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியத்திடம் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.