விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். எடப்பாடி பழனிசாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதியுள்ளவர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தின் தலைவர் யார் என்பது தான் எல்லோரிடமும் போட்டியாக உள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின், இன்று அதைப்பற்றி பேசவே இல்லை.
தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித் ஷா சொன்னார். அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார். யார் யாரோ தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். அப்படி இருக்கும் போது விஜய் ஏன் வரக்கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என சொல்ல முடியாது. எங்களுக்கு போட்டி திமுக தான். அதிமுக, திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை. எத்தனையோ கட்சிகள் வரும் போகும். திமுக பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிசாமி விடமாட்டார்.