சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியது.
இது குறித்து தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.சேசுராஜா கூறியதாவது; பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுடன் இதுவரை 6 சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எங்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கு நிதி மற்றும் சட்டரீதியான பிரச்சனை இருப்பதாக கூறினார்.
நாங்கள் நிரந்தர நியமனம் கேட்டு வருகிறோம், ஆனால் இது தொடர்பாக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் தற்போது 10,000 ரூபாய் சம்பளம் பெறுகிறோம், வேறு எந்த சலுகையும் இல்லை. 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு ஆணைப்படி, தையல், உடற்கல்வி, தோட்டக்கலை, இசை உள்ளிட்ட துறைகளை கற்பிக்க, பகுதி நேர ஆசிரியர்கள், மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். 2012 இல் 16,459 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன், தற்போது 12,199 ஆசிரியர்கள் சேவையில் உள்ளனர் என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்தித்து பேச வேண்டும். ஆசிரியர்களின் குறைகளை கேட்டால் மட்டுமே, மாணவர்கள் படிக்கும் சூழல் உருவாகும். இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்தால் மாணவர்களின் கல்வி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.